தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக நெடுங் காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர்.. தவ்ஹீத் என்றால் என்ன? அதற்கு எதிரான ஷிர்க் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட நெடியகாலமாகத் தெரியாமலேயே இருந்தது.
இஸ்லாத்தின் அடிப்படை எது என்று புரியாமல் இருளில் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடையில் சரியான கொள்கை விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கு தகுந்த கொள்கைவாதிகள் இருக்கவில்லை.
இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற அத்வைதக் கொள்கையைத்தான் பொரும்பாலான முஸ்லிம்கள் நம்பி வந்தனர் இதன் காரணத்தினால் அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று நம்பக்கூடியவரகளாக இருந்தனர். அதைப்போன்றுதான் அல்லாஹ்வை எல்லோராலும் நெருங்கமுடியாது , பாவிகள் அவனிடத்தில் நேரடியாகப் பிரார்திக்க முடியாது, அவனை நல்லோர்கள் மகான்கள் மூலமாகத்தான் நெருங்கமுடியும் என்று நம்பி இறந்துபோன அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து வந்தனர் குத்பிய்யத் மவ்லூது என்று பாடி அதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று கருதினர். ஊருக்கு ஊர் சமாதிகளைக் கட்டி வைத்து அவற்றிற்கு அழகுற மாலை போட்டு மரியாதை செய்து குத்துவிளக்கு ஏற்றி பட்டுத்துணியால் போர்த்தி உண்டியல் வைத்து விழாக்கள் கொண்டாடி இது இஸ்லாத்தின் முக்கிய அம்சம் என்று நம்பிசெயல்பட்டு வந்தனர்.
தாயத்து தகடுகள் மாந்திரீகம் சூனியம் என்ற பெயர்களால் மூடச்செயல்களைச் செய்து மாற்றாரின் கலாச்சாரத்தை முழுமையாக நம்பிச் செயல்பட்டுக்கொண்டு இதுவும் இஸ்லாம் தான்என்று நினைத்து பக்தியோடு செய்துவந்தனர். மத்ஹபுகள் என்ற பெயரில் இஸ்லாம் கூறாத எத்தனையோ சட்டங்களை மக்களுக்கிடையில் அறிமுகப்படுத்தினர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றக் கூடியவன் தான் முஸ்லிம் என்று நம்பி இஸ்லாத்தில் பிரிவினையைக் கற்பித்தனர் இரு மத்ஹப்காரர்களிடையில் ஒருவருக்கொருவர் தீண்டத்தகாரவரைப் போன்று பார்த்தனர் மத்ஹபைத் தெரியாமல் மார்க்கத்தைத் தெரியமுடியாது என்ற அளவிற்கு மத்ஹபு கொள்கை தலை தூக்கியிருந்தது. தரீக்காக்கள் பெயரால் ஒரு சாரார் மக்களை வழிகெடுத்துவந்தனர் யாராவது ஒருவரை ஏற்று அவரிடம் தீட்சை பெற்றால் அவர் சுவர்க்கம் அழைத்துச் செல்வார் என்றும் நம்பி வந்தனர்.
இந்நிலையில் உள்ள மக்களின் பரிதாபகரமான நிலையை உணர்ந்து, அவர்களை நரக விழும்பிலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தின் பால் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் தூய வடிவை தெரிய வேண்டூமானால் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற உண்மையை எடுத்துக்கூறி மக்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என்ற மகத்தான பணிக்காக உருவாக்கப்பட்டது தான் “ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்” (JAQH)
செயல்பாடுகள்: வழிகேட்டிலிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நேர்வழி காட்டி அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் தூய வழியைத் தெரிந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறுக்கும் அதிகமான பள்ளிவாசல்களை உருவாக்கி மிகச்சிறப்பான பிரச்சார சேவையை செய்து வருகிறது.
நூற்றுக்கணக்கான ஆதரவற்ற அநாதைகளை பராமரிப்பதற்காக மூன்றுஅநாதை இல்லங்களை திருச்சி & மணப்பாறை மற்றும்குமரி மாவட்டம் இனயத்திலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நூறுக்கும்அதிகமான மதரஸாக்கள் சிறார்களுக்காக தமிழகம் முழுவதும் நி றுவி மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தி இஸ்லாத்தின் அடிப்படை கல்வியை போதித்து வருகிறது.
இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் மாநில, மாவட்ட மாநாடுகள், கருத்தரங்குகள், தெருமுனை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், இலவச வெளியீடுகள் என்று பல்வேறு வகையில் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. அமைப்பிலுள்ள பிரச்சாரகர்களின் உழைப்பால் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்துள்ளனர். பெண்கள் இஸ்லாமிய கல்வியை முழுமையாகப் பெற்று, தம் வாழ்கை முறையை தூய இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்வதோடு, தன்னைச் சார்ந்த மக்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் மார்க்க அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழக்கத்தின் பல பகுதிகளிலும் பெண்களுக்கான இஸ்லாமிய கல்லூரிகளை உருவாக்கி சிறப்பான பாடத்திட்டத்தின் மூலம் இஸ்லாமிய கல்வி கற்பிக்கப்படுகிறது.
தலைசிறந்த மார்க்கப்பிரச்சாரகர்களை உருவாக்கி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துசொல்லவேண்டும் என்ற நோக்கில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அல் ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி என்ற பெயரில் துவங்கப்பட்டு இதில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான முறையில் மார்க்கபணியினை செய்து வருகின்றனர்.
வட்டி என்னும் பெரும்பாவத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க பைத்துல் மால் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், பைத்துஸ்ஸக்காத் வாயிலாக செல்வந்தர்களிடமிருந்து ஸக்காத்தை பெற்று அதனை தகுதியானவர்களுக்கு பங்கீடு செய்து கொடுத்தல் ஆகிய பணிகளை சிறப்பாக நமது ஜமாஅத் செயல்படுத்தி வருகிறது.
மனிதகுலத்தை அல்லாஹ் ஒரு தாய், ஒரு தகப்பனிலிருந்து படைத்ததாக திருக்குர்ஆனில் கூறுகிறான். பிரிக்க இயலாத சகோதரத்துவத்தின் பெருமையை நெஞ்சிலேற்றி பேரிடர் காலகட்டங்கள் மற்றும் மக்கள் வெகுவாக பாதிக்கப்படும் போது ஜாதி, மத, இன வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டு சென்னை, கடலூர், அஸ்ஸாம், உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா ஆகிய பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் நமது ஜமாஅத் முன்னிலையில் நின்று செயலாற்றுகின்றது. சமீபத்திய கேரள வெள்ள நிவாரணத்திலும் அல்லாஹ்வின் உதவியால் சிறப்பான முறையில் நிவாரண பணிகளை நமது ஜமாஅத் மேற்கொண்டது. பேரிடர் நிவாரண களத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து, தகுதியானவர்களை தேர்வு செய்து நாம் செய்யும் நிவாரணப் பணிகள் மக்களுக்கிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்திய கேரள நிவாரணப்பணியின் போது கேரள சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பொறுப்பாளர்கள் என்று அனைவரும் நமது நிவாரண விநியோக களத்தில் பங்கேற்று நமது ஜமாஅத்தின் பணிகளை வெகுவாக பாராட்டினர்.
இதுபோன்று இன்னும் பல அறப்பணிகளுடன் அழைப்புபணிகளையும் தமிழகத்தின் ஏகத்துவ தாய்ச் சபையான ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH) செய்து வருகிறது. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்நோக்கி இந்த அமைப்பு அது துவங்கிய காலத்திலிருந்து அல்லாஹ்வின் மகத்தான கருணையால் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.